மணிகண்டன் மரணத்தை ஒட்டி காவல் ஆணையர் போக்குவரத்து போலீஸாருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளார்.
கால்டாக்சி ஓட்டுநர் மணிகண்டனை அவதூறாக பேசி தாக்கியதால் அவமானமடைந்த மணிகண்டன் தீக்குளித்தார், பின்னர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் பொதுமக்களிடையே ஒரு கோப அலையை எழுப்பியது.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த விவகாரத்தில் உடனடியாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களை அழைத்து தானே நேரடியாக ஆலோசனை வழங்கினார். பின்னர் போக்குவரத்து போலீஸார் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இது குறித்த விபரம் வருமாறு:
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாயிண்டில் நின்று பணி முடியும் நேரம் வரை நியமிக்கப்பட்ட இடத்தில் நின்று அலுவல புரிய வேண்டும். நியமிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் உதவி ஆய்வாளர் அனுமதி பெற்று வேறு ஒருவரை அந்த இடத்தில் நிற்கவைத்துவிட்டு செல்ல வேண்டும்.
பாயிண்டில் நிற்பவரை தவிர வேறு இடத்தில் உள்ளவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து நின்று அலுவல் புரிய கூடாது. சுத்தமான சீருடையில் வரவேண்டும்.
2. பாயிண்ட் அலுவலின் போது செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்ககூடாது.அத்தியாவசிய அழைப்பாக இருந்தால் மட்டும் சிறிது நேரத்தில் பேசிவிட்டு பணியாற்ற வேண்டும். நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க கூடாது.
3. காவலர்கள் சாதாரண உடையிலோ, சீருடையிலோ இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். இதை மீறிச்சென்றால் உயர் அதிகாரிகள் தணிக்கையின் போது கடும் நடவடிக்கை இருக்கும்
4. காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை தணிக்கை செய்யக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பிடயரி(B,diary) வழக்குகள் பதிவு செய்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் விதி மீறும் வாகனங்களை துரத்தி பிடிக்க கூடாது.
5. J,walk- ஜெ.வால்க் பணி ஆற்றும் காவலர்கள் பாதசாரிகளை விசில் ஊதித்தான் சைகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பாதசாரிகள் சுரங்கப்பாதையை உபயோகிக்காமல் சாலையை கடக்கும் போது விசில் ஊதி அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
6. காவல் ஆணையர் உத்தரவுப்படி மாலை 6 மணிக்கு மேல் பாயிண்ட் அலுவலில் உள்ள காவலர்கள் ரிஃப்லக்ட் ஜாக்கெட், மற்றும் மிளிரும் விளக்கு கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.