அதிரையில் அதிகரிக்கும் திருட்டு.
கடந்த சில மாதங்களாகவே நமதூரில் திருட்டு அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிகிறோம். ஆனாலும் அதை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம் காரணம் திருடப்பட்டது நமது உடமைகள் அல்ல என்ற ஒரு சுயநலம் தான்.
காவல்துறை என்னதான் முயற்சித்தாலும் (?) திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதும் சரிதான் ஆனாலும் திருடன்களை ஒழித்தால் திருட்டு தானாகவே ஒழிந்துவிடும் அல்லவா?
திருடன்களை எப்படி ஒழிப்பது ஒரு பார்வை,
உதாரணத்திற்கு கடற்கரை தெரு இளைஞர்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் முன்வந்து தெருவில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு திருட்டை ஒழிக்க எடுத்த முயற்சியைப் போல் ஊரில் உள்ள அனைத்து தெரு இளைஞர்கள் நற்பணி மன்ற உறுப்பினர்களில் ஊர் நலன் விரும்பிகளில் தெருவுக்கு இரண்டு இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு தலைவரையும் நியமித்து செயல்பட்டால் கண்டிப்பாக திருடன்களை ஒழித்தும் விடலாம் அனைத்து தெரு இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல நட்பும் மலரும்.
தேர்ந்தெடுக்கப்படும் தெருவுக்கு இரண்டு இளைஞர்களுக்கு அந்தந்த தெரு ஜமாத்தார்கள் ஒரு ஊதியத்தையும் நிர்ணயத்து வழங்கிட வேண்டும்.
இதற்கு செயல்வடிவம் கொடுத்தால் நித்தமும் நிம்மதியான நித்திரை நிச்சயம் இல்லையேல் நாம் காலத்திற்கும் களவு கொடுப்பதும் நிச்சயம்.
முன் உதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கும் கடற்கரை தெரு இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்.
ஆக்கம் : வஜிர் அலி.