நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்ததை கண்டித்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி நெடுவாசல் பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவளித்ததாலும், போராட்டம் வலுத்ததாலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தன.
ஆனால், உறுதியளித்தபடி எந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நெடுவாசலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நெடுவாசல் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.