நீட் தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாகியிருப்பதால், பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் தேர்வை விடாப்பிடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். மருத்துவம் படிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்ட நிலையில், மாணவர்கள் மத்தியில் தங்கள் மீது நம்பிக்கை உண்டாக ஆவன செய்ய வேண்டிய சி.பி.எஸ்.இ, இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடி வருகிறது.
வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள், தேர்வு எழுதும் போது, பதற்றத்துடன் சென்றால் என்ன ஆகும், என இவர்கள் யோசிப்பதே இல்லை. தேர்வு மையங்களை நிறுவுவதாக இருந்தாலும் சரி, தேர்வுக்கு முன் மாணவர்களை சோதனை செய்வதாக இருந்தாலும் சரி. தங்களுக்கு எது வசதியோ அதைத் தான் செய்கின்றனர்.
தேர்வு மையங்களுக்கு விதிமுறைகளை சரியாக எடுத்துரைக்காமல், முழுக்கை சட்டை போட்ட மாணவர்களை சட்டையை கிழிக்க வைப்பது, வெடிகுண்டு சோதனை செய்யும் மெட்டல் டிடெக்டரை வைத்து மாணவர்களை சோதிப்பது, ஜீன்ஸ் பேண்ட்டின் பெரிய பட்டனை கழற்ற சொன்னது, ஒரு மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னது என கடந்த வருடம் மாணவர்களை படாத பாடு படுத்திவிட்டார்கள்.
இது குறித்து சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, “நாங்கள் சொன்னதை சில ஆசிரியர்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடித்துவிட்டார்கள்” என தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல சிபிஎஸ்இ சமாளித்தது. பெற்றோருடன் வந்தவர்கள், போட்டிருந்த கம்மல், மோதிரம் போன்ற நகைகளை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். தனியே தேர்வு எழுத வந்தவர்களின் நிலை? கூடுதலாக சில கண்காணிப்பாளர்களை நியமிப்பதை விட்டுவிட்டு, தேர்வுக்கு முன் மாணவர்களை ஜெயில் கைதிகளை போல 1 மணி நேரம் லைனில் நிற்க விட்டு சோதனை செய்கிறார்கள். இவற்றால், வேர்த்து, விறுவிறுத்து, சோர்ந்துபோய் தேர்வு எழுதும் மாணவர்கள் எக்கச்சக்கம்.
இந்த ஆண்டு தேர்வுக்கு முன்னதாகவே இவ்வளவு சர்ச்சை. மாணவர்கள் 3 தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம் என கூறிவிட்டு, மூன்றுமே இல்லாமல், கேரளாவின் எர்ணாகுளத்தில் தேர்வு மையத்தை கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதுகுறித்து கேட்டபோது, “நீதிமன்றத்தின் உத்தரவு எங்கள் கைகளுக்கு வரவில்லை. வந்தவுடன் ஆலோசித்து பதில் சொல்கிறோம்” என ஹாயாக சொல்லிவிட்டு, தேர்வு நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னால் மேல்முறையீடு செய்கிறார்கள்.
உச்ச நீதிமன்றமோ, மாணவர்களின் வாதங்களை எடுத்துக் கொள்ளாமல், கடைசி நேரத்தில் எதையும் மாற்ற முடியாது என அவசர அவசரமாக தீர்ப்பளித்துள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது மிகக் குறைந்த மாணவர்களே என்று நீட் தலைவர் சன்யம் பரத்வாஜ் கூறியுள்ளார்.
ஆனால், சுமார் 5000 மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என சிபிஎஸ்இ-யின் தமிழக தலைமை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களை விட இந்த வருடம் 31% பேர் அதிகமாக விண்ணப்பித்தது இதற்கு காரணமாம். அதனால் குறிப்பிட்ட அளவு மாணவர்களை தான் இங்குள்ள மையங்களில் அனுமதிக்க முடியும் என்கிறார் பரத்வாஜ். எவ்வளவு பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்று கூட தெரியாமல், இவர்கள் என்ன தேர்வு நடத்துகிறார்கள்?
இவர்கள் செய்த தவறுகளுக்கு தற்போது மாணவர்கள் படாதபாடு படுகிறார்கள்.
வெளி மாநிலங்களுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு உதவி செய்ய பலர் முன்வந்துள்ளார்கள். தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என பலரும் உதவிவரும் நிலையில், தமிழக அரசும் மாணவர்களுக்கு பயண உதவித்தொகை தருவதாக கூறியுள்ளது. மாணவர்கள் எளிதாக தேர்வு மையங்களுக்கு செல்ல, உதவி மையங்களை ஏற்பாடு செய்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
இனி மாணவர்கள் அடித்து பிடித்து எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு சென்றாலும், “முழுக்கை சட்டையை கிழித்துவிட்டு வாருங்கள்”; “2 நிமிடம் லேட்டாகிவிட்டது, அதனால் தேர்வு எழுத முடியாது” என்று சொல்லத்தான் போகிறார்கள்.
இவர்களுக்கு இடையில் சிக்கி, மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவராவது உண்மையிலேயே பெரிய சாதனை தான்….!