அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார்.
இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் ஏ.மீனாகுமாரி , ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி CBSE பள்ளியின் இயக்குநர் டி.வி.ரேவதி , இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் துணை முதல்வர் தபிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் எம். எப். முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். பேராவூரணி அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவ அலுவலர் டாக்டர். ஹெச். இர்சாத் நஸ்ரின் கருத்தரங்கினை துவக்கி வைத்தார். சென்னை வேஸ்ட் வின் ரிசைக்களர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஐ. பிரியதர்ஷினி கருத்தரங்க உரையாற்றும்போது, “குப்பைகளை சரியாக பராமரிக்காவிட்டாலும், எரிப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளையும். பல நோய்கள் பரவும். குப்பைகள் சேகரித்து வீடுகளில் உரம் தயாரிக்க முடியும்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக், தெர்மோகோல், பேப்பர் கப்புகள் மற்றும் பைகள், தட்டுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்” என்றார். வீட்டில் சேரும் குப்பைகளை கொண்டு எளிய முறையில் உரம் தயாரிக்கும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது. தீங்கு விளைவிக்காத, துணியில் தயாரிக்கப்பட்ட, மறுமுறை பயன்படுத்த கூடிய சானிட்டரி நாப்கின் பயன்பாடு பற்றி விளக்கப்பட்டது.
கருத்தரங்கில் பங்குபெற்ற மகளிரில் பத்து பேருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 200 மகளிர் பங்குபெற்றனர். முடிவில் தணிக்கையாளர் என். ஷேக்தம்பி நன்றி கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளனர்.