ஆதார் எண்ணை தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை கூறுங்கள் என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் விட்ட நிலையில், அவர் தொடர்பான தகவல்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.ஆதார் அட்டை பெறுவதற்காக வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை திருடுங்கள் என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் ஒன்றை விடுத்தார். ட்விட்டரில் அவரது 12 இலக்க ஆதார் எண்ணையும் வெளியிட்டார்.ஆதார் எண் வெளியான சில மணி நேரத்திலேயே எலியட் ஆண்டர்சன் என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஆர்.எஸ்.சர்மாவின் முகவரி, பிறந்தநாள், தொலைபேசி எண், பான் எண் போன்ற தகவல்கள் வரிசையாக பதிவிடப்பட்டன. அத்துடன் உங்கள் ஆதார் எண் எந்த வங்கிக் கணக்குடனும் லிங் செய்யப்படவில்லை என்றும் ட்வீட் போடப்பட்டது. அந்த தொலைபேசி எண் தனது அல்ல என டிராய் தலைவர் கூற, அது உங்களுடைய உதவியாளருடையது என பதில் ட்வீட் வந்தது.மேலும் ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் எனவும் எலியட் ஆண்டர்சன் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் BAPTISTE- தான் எலியட் ஆண்டர்சன் என்ற பெயரில் ட்விட்டரில் இந்த தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.