அதிரையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து, அவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வேளையில் ஒரு சில சமூக விரோத விஷமிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகள் ஆலோசனை கூட்டமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றது.
அதேபோல் அதிரையில் தொடர்ந்து போதை பழக்கத்திற்கு ஆளாகி வரும் இளைஞர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை முடிந்தவுடன் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது.
அஸர் முதல் மக்ரிப் தொழுகை வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் போதை பழக்கத்திற்கு ஆளான இளைஞர்களை மீட்பது குறித்து அதிரைவாசிகளிடம் கருத்து கேட்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. இதில் முந்நூறுக்கும் மேற்பட்ட அதிரையர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.