தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி காத்து கிடக்கிறது என ஏபிபி சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைத்தும், அடுத்து நடக்க உள்ள தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.
இதில் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மாநில வாரியான கருத்துக் கணிப்பை நடத்தியது. தென் மாநிலங்களில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெரியவந்துள்ளது.
கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் மொத்தம் 129 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் மற்ற கட்சிகள் (மாநில கட்சிகள்) 76 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் பாஜக கூட்டணி 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் சர்வே முடிவுகள் கூறுகின்றன. தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தென் மாநிலங்களில் மிகப்பெரிய அடி காத்திருக்கிறது என்பதைஹீ இந்த சர்வே முடிவு காட்டுகிறது.
பாஜக பொதுக் கூட்டங்களில் பேசும் தலைவர்களோ தமிழகத்தில் பாஜக நல்ல இடத்தை பிடிக்கும், தாமரை மலரும் என்கிறார்கள். ஆனால் கருத்து கணிப்பு முடிவுகளோ அவர்களுக்கு எதிராகவே உள்ளது. தென் மாநிலங்களில் அவர்கள் சரிவை சந்திப்பதற்கு காரணம் மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்துவதே ஆகும்.
கர்நாடகம் மற்றும் கேரளத்தில் மழை வெள்ளத்தின் போது மாநில அரசுகள் கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. அது போல் இந்த 5 மாநிலங்களிலும் நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவையே பாஜக சரிவதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.