பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார். இதனால் அவரும் அவரது நண்பர்களும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை கையெழுத்திட சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் கையெழுத்திட்டு வெளியே சென்று கொண்டிருந்தபோது வந்த மர்ம நபர்கள் உடனே வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் அவர்களைச் சுற்றி புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரகாஷ் என்ற இளைஞரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். உடனே அவருடைய தலையை பாளையத்திலும் , உடலை ஆலடிக்குமுலையிலும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இறந்த பிரகாஷின் உடல் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பட்டப்பகலில் பட்டுக்கோட்டையில் நடந்துள்ள இக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.