புயல் காலத்தில் மக்கள் எவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா என்று பெயர் கொண்ட புயல், இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் நடுவே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களிலும், ஆந்திராவில் ஒரு சில இடங்களிலும் மழையோ அல்லது கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனிடையே தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், மக்களுக்கு முன்னெச்சரிக்கை குறிப்பை ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புயலுக்கு முன்பாக:
★வதந்திகளை நம்பாதீர்கள், அமைதியாக இருங்கள், பீதிக்கு உள்ளாக்காதீர்கள்.
★உங்களது செல்போன்கள், முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
★ரேடியோவை கேளுங்கள், செய்தி ஊடகங்களையும், தொலைக்காட்சி சேனல்களையும் தொடர்ந்து கவனியுங்கள். அதில் வரும் வானிலை தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
★வீட்டில் உள்ள ஆவணங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தண்ணீர் புகாத அளவுக்கான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
அவசரகால உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
கூர்மையான பொருட்களை, எளிதில் விழுந்து விடும் அளவுக்கு வைத்திருக்காதீர்கள்.
★பழுது இருந்தால், வீட்டை செப்பனிட்டுவிடவும்.
கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை கட்டி வைக்காதீர்கள்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
★கூடுதல் பேட்டரிகளுடன் ரேடியோ பெட்டியை கையில் வைத்துக் கொள்ளவும்.
★படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவும்
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
★புயல் காலத்திலும், புயலுக்குப் பிறகுமான பாதுகாப்பு- வீடுகளுக்குள் இருப்போருக்கு
மின் இணைப்புகள் மற்றும் எரிவாயு இணைப்பு ஆகியவற்றை துண்டித்து வைத்துக் கொள்ளவும்.
★வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டிக் கொள்ளவும்.
உங்களது வீடு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தீர்கள் என்றால், புயல் வீசத் தொடங்கும் முன்பாகவே, பாதுகாப்பான, வேறு இடத்திற்கு சென்று விடவும்.
★ரேடியோ அறிவிப்புகளை கேட்டுக்கொண்டிருக்கவும். அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை மட்டும் நம்புங்கள்.
கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை மட்டும் பருகவும்.
★வெளியில் இருந்தால்
பழுதடைந்த கட்டிடங்களுக்குள் அடைக்கலம் புகவேண்டாம்.
★உடைபட்ட மின்கம்பங்கள், மின்சார வயர்கள், பிற கூர்மையான பொருட்கள் இருக்கும் இடங்கள் அருகே செல்ல வேண்டாம். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து விடவும்.
மேலும் இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகளுக்கும், மீட்பு குழுவினருக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.