கடந்த மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது. அந்த கஜா புயலினால் அதிரையில் 111 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் பெரும்பாலான மரங்கள் முறிந்து விழுந்தன.
அவ்வாறு முறிந்து விழுந்த மரங்களும், குப்பைகளும் அதிரை பேரூராட்சியின் சார்பில் அள்ளப்பட்டது. ஆனால் அதிரை பேரூராட்சி குப்பை கிடங்கில், புயலில் அள்ளப்பட்ட குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால், ஈசிஆர் சாலையில் ஊருக்கு வெளியே இருபுறமும் கொட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிரை-முத்துப்பேட்டை மற்றும் அதிரை-மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு சில விஷமிகள் இன்று தீவைத்து விட்டுச் சென்றுள்ளனர். இதனால் குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்தது. அதிலிருந்து அதிக அளவிலான புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்களும், ஈசிஆர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மக்கள் மீண்டு, தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வரும் இவ்வேளையில், சமூக விரோத விஷமிகள் இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.