பிரதமர் நரேந்திர மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றுக் கொண்டார். அவரின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த கடன்கள் குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாட்டின் ஒட்டுமொத்த கடன் 54,90,763 கோடியாக இருந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நான்கரை ஆண்டுகளுக்கு பின் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடிக்கு மேல் (82,03,253) அதிகரித்துள்ளது. அதாவது 49 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் பொதுக்கடன் 48 லட்சம் கோடியிலிருந்து 73 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 51.7 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுக்கடன் அதிகளவு அதிகரித்திருப்பதே ஒட்டுமொத்த கடனும் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுதவிர தங்க நாணய திட்டம் உள்பட சந்தைக் கடன்கள் நான்கரை ஆண்டுகாலத்தில் 47.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தங்க பத்திர திட்டத்தில் எந்தவொரு கடனும் இல்லாமல் இருந்தநிலையில் தங்க நாணய திட்டம் உள்பட சில திட்டங்களால் 2018-ல் 9,089 கோடி கடன் அதிகரித்துள்ளது.