பெட்ரோல் பைக் பிரியர்களா நீங்கள். அடுத்த ஆபத்து பெட்ரோலால் இயங்கும் பைக்குகளுக்கு தான். இதுகுறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்குத் தான்.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பேராபத்தைச் சந்தித்து வருகிறது. மேலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் பலதரப்பட்ட வியாதிகளும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இந்த பேராபத்தைத் தவிர்க்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் மீது பசுமை வரி (Green Cess) என்னும் புதிய வரி விதிப்பை திணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனையை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.
மேலும், அடுத்த 2-3 ஆண்டுகளில் ஒரு மில்லியன் மின்சார இருசக்கர வாகனங்களை சாலையில் ஊக்குவிப்பதற்காக, பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மீது 800-1000 ரூபாய் பசுமை வரி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஈடி ஆட்டோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
தற்போது பெட்ரோல் மற்றும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கிடையேயான விலையானது 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை வித்தியாசம் உள்ளது. இந்த வேறுபாட்டைக் குறைக்கும் விதமாகவும் மாசினை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது சிறிய அளவில் வரி சுமத்தப்பட உள்ளது.
அதன்படி, பெட்ரோல் இரு சக்கர வாகனங்களின் மீது பசுமை வரி விதிகப்படுமானால், இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயரும். இதனால் பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விற்பனை சற்று குறைக்கப்பட்டு மின்சார இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு, நாட்டின் வருவாயும் தக்கவைக்கப்படும். மேலும், காற்று மாசு தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழலும் பாதுக்கப்படும்.
இருசக்கர வாகனங்களின் மீதான பசுமை வரி விதிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்குமாறு முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களின் ஜாம்பவான்களான, ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜல், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேனு சீனிவாசன் ஆகியோர் முறையிட்டுள்ளனர்.
வரி விதிப்பைத் தொடர்ந்து, மேம்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்துவதன் காரணமாகவும், BS VI உமிழ்வுத் (Emission) தரநிலைக்கு பைக்குகளின் எஞ்ஜின் மாற்றப்படுவதாலும் பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விலை விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 21 மில்லியனுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.