கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை எதிர்த்து எப்போதும் போல தமிழர்கள் பலர் போராடி வருகிறார்கள். இதனால் டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது.
இந்த டேக் தற்போது தேசிய அளவில் வைரலாகி உள்ளது. தேசிய அளவில் டிரெண்டாகி இந்த டேக் முதலிடம் பிடித்து உள்ளது. இதில் நேற்று இரவில் இருந்து தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள்.
இதில் மோடிக்கு எதிராக நிறைய கருத்துக்கள் வைக்கப்பட்டு, கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக ஓகி புயலின் போது குமரி மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் ஒரு பாஜக எம்.பி குமரியில் இருந்து தேர்வு செய்யப்பட்டும் கூட, பிரதமர் மோடி சேதங்களை பார்வையிட வரவில்லை. அதேபோல் குமரி மக்களுக்கு போதுமான நிவாரணமும் வழங்கப்படவில்லை.
அதேபோல் தென் மாவட்டங்களை அதிகம் பாதித்த தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, வார வாரம் கைது செய்யப்படும் குமரி மீனவர்கள் என முக்கியமான விஷயங்கள் எதையும் பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அறிக்கையோ, பேட்டியோ கூட அவர் கொடுக்கவில்லை.
அதேபோல் கஜா புயல், விவசாயிகள் போராட்டம், குரங்கணி தீ விபத்து என்று தமிழகத்தின் வேறு எந்த விதமான பிரச்சனை குறித்தும் அவர் பேசவில்லை. ஆனால் இவ்வளவு நடந்த பின் வராமல் தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் மோடி தமிழகம் வருவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் நேரத்தில்தான் தமிழகம் கண்ணுக்கு தெரிகிறதா என்று #GoBackModi ஹேஷ்டேக்கில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.