கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அதிமுகவின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் இன்று காலை சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் முன்னே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே மரணம் அடைந்தார்.
எம்எல்ஏ கனகராஜூக்கு வயது 64 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2016 சட்டசபை தேர்தலில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் எம்எல்ஏ கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனதில் பட்டதை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி பேசுபவர் கனகராஜ். அவருடைய மறைவு அதிமுகவுக்கு பெரும் இழப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சூலூர் கனகராஜின் மறைவால் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.