Home » பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கையூட்டு வாங்குகிறதா அதிரை பேரூராட்சி ?

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கையூட்டு வாங்குகிறதா அதிரை பேரூராட்சி ?

0 comment

உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலைகள், துணிப்பை போன்றவைகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசின் உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக பிளாஸ்டிக் பயன்பாடு இன்றளவும் இருந்து வருகிறது. மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக அதிரையில் பேரூராட்சி அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பலமுறை ஆதாரத்துடன் புகார் அளித்தும், அதிரை பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் இருமுறையோ ஆய்வு என்கிற பெயரில் சிறு வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி அபராதம் விதிப்பதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களை கண்டுகொள்வதில்லை என்றும் சரமாறியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரிகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிரை பேரூராட்சி முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும், வலியுறுத்தலாகவும் உள்ளது. அதிரை பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சமற்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter