தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அத்திட்டங்களை கைவிடக்கோரியும் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இன்று 23/06/2019 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அதிரையில் நடைபெற்ற போராட்டத்தில் பேரழிவிற்கு எதிரான பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின், தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ, மமக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், நாம் மனிதர் கட்சியினர் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று பதாகைகளுடன் கோஷமிட்டனர்.