கட்சிகளை வளைப்பது, எம்.எல்.ஏக்களை இழுப்பது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை கைவிட்டு கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்கும் புது வியூகத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்திகள் வெடித்தன. இதனால் கர்நாடகாவில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என விரக்தியோடு பேட்டி அளித்தார் தேவகவுடா. பின்னர் காங்கிரஸ் அளித்த உறுதிமொழியால் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் தேவகவுடா.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் மற்றும் மத்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 11 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் குமாரசாமி அரசு எந்த நேரத்திலும் கவிழக் கூடும் என்கிற நிலை உருவாகி உள்ளது.