திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று 6ம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
மதியம் இரண்டு மணியளவில் ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக செம்படவன்காடு சென்று பாமினி ஆற்றில் மாலை 6 மணியளவில் கரைக்கப்பட உள்ளது.
முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த பகுதி என்பதாலும், அசம்பாவிதம் ஏற்பட வாய்பிருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 4,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில், திருவாரூர் மாவட்ட எஸ்பி துரை, டிஎஸ்பி இனிகோ திவ்யன், ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிரடிப்படையினர், அதிவிரைவுப்படையினர் உள்பட 4,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே தற்காலிக சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு நகர் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.