அதிரையில் கடந்த ஆகஸ்டு மாதம் (02-08-2019) வெள்ளிக்கிழமை முதல் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா பள்ளிவாசலில் புகாரி ஷரீஃப் துவங்கியது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (14-09-2019) சனிக்கிழமையுடன் நிறைவுற்றது.
முன்னதாக காலை 6 மணி முதல் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்று பின்னர் புகாரி ஷரீஃப் ஓதி நிறைவு செய்யப்பட்டு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T. முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு (சொற்பொழிவு) பயான் நடைபெற்றது. இதன் பின்னர் சிறப்பு து ஆ (பிரார்த்தனை) செய்யப்பட்டு இனிதே இவ்வாண்டு புகாரி ஷரீஃப் நிறைவுற்றது.
முன்பொரு காலத்தில் அதிரையர்களை காலரா எனும் நோய் ஆட்கொண்டு நாளுக்கு நாள் உயிர்பலி வாங்கிய நேரத்தில், ஷைகுணா ஆலிம் அவர்களின் ஆலோசனையின்படி காலரா நோயை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி புகாரி ஷரீஃப் ஆரம்பிக்கப்பட்டது. புகாரி ஷரீஃப் ஆரம்பித்த அன்றிலிருந்து இன்று வரையிலும் அதிரைக்கு காலரா எனும் கொடிய நோய் எட்டிப்பார்க்கவில்லை எனலாம்.
இவ்வருட இந்த புகாரி ஷரீஃப் நிறைவு நாளில் ஆண்கள், பெண்கள் என 3000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.