பா.ஜ.கவின் மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, இந்துத்துவ தத்துவத்தின் பிதாவான வினாயக் தாமோதர் சாவர்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்குவதாக அறிவித்திருப்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசத்திற்கும், மனிதக்குலத்திற்கும் விரோதமான நாசகர மரபை உருவாக்கிய மறைந்த சாவர்கருக்கு, நாட்டின் உயரிய விருதை வழங்கி தேசிய நாயகனாகச் சித்தரிப்பதை நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆரம்பத்தில் சாவர்கர் விடுதலைப் போராட்ட வீரராகத் தன்னை இனங்காட்டிக்கொண்டு பின்பு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கைக்கூலியாகத் தார்மீக ரீதியாகவும், செயல் ரீதியாகவும் தன்னை முழுமையாக ஆக்கிக்கொண்டவர். ஜாதியவாதம், அடிமைத்தனம் மற்றும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ கருத்தியலை அறிமுகப்படுத்தியவர் சாவர்கர்.
தேசத்தைத் துண்டாடக் காரணமாக இருந்த இருதேசக் கொள்கைக்கு வெளிப்படையாக ஆதரவளித்தவர் சாவர்கர். இந்திய விடுதலைக்கு முன் இருதேசக் கொள்கையை வலியுறுத்திய அவரின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால், நாம் 1937 முதல் 1942 வரையுள்ள அவரின் சொற்கள் மற்றும் செயல்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியமாகும்.
சாவர்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மகாராஷ்டிரா பா.ஜ.க. கொடுக்க என்ன காரணம் என்ற கேள்வியை பைஜி எழுப்பினார். இத்தகைய தேர்தல் வாக்குறுதிக்கு முக்கியக் காரணம் இந்துத்துவ அரசியலை நிலைநிறுத்தவும், மகாராஷ்டிர பிராமணர்களின் வாக்குகளை கவர்வதுமே பா.ஜ.கவின் திட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் “வரலாற்றை மாற்றி எழுதுவோம்” என்ற கூற்று இந்தியாவின் நலத்தைக் கருத்தில்கொண்டு பார்த்தால் வேண்டப்படாத கருத்தாகவும், தீயநோக்கம் கொண்டதாகவும் உள்ளது தெளிவாகிறது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அவர் தனது அறிக்கையில், கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் புதிதாகக் கிடைத்த ஆதாரங்களைக்கொண்டு அவற்றை நிரூபிக்கும் பொருட்டு திருத்தி மெருகூட்டுவதில் தவறில்லை. ஆனால் அமித் ஷாவின் “வரலாற்றை மாற்றி எழுதுவோம்” என்ற அறைகூவல் முன்கூட்டி திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட செயல்திட்டங்களுக்கு முன்னோட்டமாக இருப்பதோடு, ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையில் அவர் ஆட்சி மற்றும் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதே அவரின் நோக்கமாக உள்ளது.
இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் இதிகாசங்கள், புராணங்கள் வாயிலாகப் பழங்காலக் கதைகளின் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்வதோடு, இடைக்கால வரலாற்றை வெளிநாட்டவரின் படையெடுப்பு என்ற மிகையான நச்சுக்கருத்தை விதைப்பதாகவே அது இருக்கும் என்றும் ஃபைஜி சுட்டிக்காட்டினார்.