திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 16 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
குழந்தை விழுந்த சமயத்தில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்த நிலையில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை தற்போது 85 அடி ஆழத்துக்கு சென்றிருப்பதாக தெரிகிறது.
குழந்தை மீது ஈரப்பதமான மண் சரிந்து விழுந்திருப்பதும், சிறுவன் அசைவற்று இருப்பதும் மீட்புக் குழுவினருக்கு மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
குழந்தையை உயிரோடு மீட்பதில் மீட்புக் குழுவினர் நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மீட்பு பணியில் ஈடுபட நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் விபத்துகளின் போது மீட்புப் பணிகளில் ஈடுபடும் மீட்புக் குழு விரைந்துள்ளது.
இதுதவிர மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஓஎன்ஜிசி குழுவினர் என அனைத்து குழுவினரும் ஒருங்கிணைந்து சிறுவனை மீட்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது. அப்போது உடனே தொடங்கிய மீட்பு பணி, தற்போது 24 மணிநேரத்தை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லாம் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுக்காகத்தான் !