கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு தவறி விழுந்தான் 2 வயது குழந்தை சுர்ஜித். குழந்தை விழுந்ததுமே அவனை மீட்கும் பணிகள் ஆரம்பமாகின. ஆனால் பல்வேறு கட்ட மீட்பு நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்தன.
இதையடுத்து, ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் ஆரம்பமாகின. கிணற்றுக்கு பக்கத்திலேயே ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.
ஆனால் அதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. முதல் ரிக் இயந்திரம் வைத்து 35 அடி மட்டுமே குழி தோண்டப்பட்டது. ஆனால், அந்த இயந்திரம் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் 2வது இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சுர்ஜித் விழுந்த ஆழ்துளை அருகே 3 மீ தூரத்தில் 2வது குழி தோண்டப்பட்டு வருகிறது.
விடிகாலை சுமார் 4:30 மணியளவில் இந்த இயந்திரத்திரத்தின் பல் சக்கரத்தில் ரிப்பேர் வந்துவிட்டது. ஆனால், வெல்டிங் மூலம் ரிப்பேர் சரி செய்யப்பட்டு, திரும்பவும் குழி தோண்டும் பணி துவங்கியது. குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் அருகிலேயே தயார் நிலையில் உள்ளனர்.
கடினமான பாறைகள் இருப்பதால் 2-வது ரிக் இயந்திரத்தின் மூலமும் குழியிடும் பணி தாமதமாகி உள்ளது. 5 மணி நேரத்தில் 10 அடிக்கு மட்டுமே குழி தோண்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாறைகள் அருகருகே இருப்பதால் வேகமாக குழி தோண்ட முடியவில்லை என்கிறார்கள். இதனால் சுர்ஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்தும் நடந்து வருகிறது.
நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாறைகள் மிகவும் கடினமாக உள்ளதாகவும், இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் பாறைகளால் மிகப்பெரிய இயந்திரங்களே பழுதடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 100 அடிக்கும் கீழே குழந்தை சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவனது கை இறுக பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையை பார்த்துவிட மாட்டோமா என்ற பொதுமக்களின் கவலை அதிகரித்து காணப்படுகிறது. அவன் நல்லபடியாக வந்துவிட வேண்டும் என்று மக்களின் பிரார்த்தனையும் வலுத்து வருகிறது.
இப்போது உடைக்கப்பட்டு வரும் பாறைகள் இளகுவாக இருக்கிறதாம். அதன் நிறமும் மாறி உள்ளதாம். இதைதவிர, கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற டிரில் பிட் வருகிறது. அதி நவீன டிரில் மெஷின் ஆகாஷ் வந்ததும், டிரில் பணி மேலும் வேகமடையும் என தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் ஆகாஷ் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுகின்ற குழந்தையை மீட்க முறையான இயந்திரம் இல்லாததன் கொடுமை, 63 மணி நேரத்திற்கு மேலாகியும் நம்மால் மீட்க முடியவில்லை !