Thursday, April 25, 2024

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்.. தேசியவாத காங்கிரசை உடைத்து ஆட்சி அமைத்த பாஜக !

Share post:

Date:

- Advertisement -

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 24-ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க சிவசேனா கூட்டணி முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணியில் பதவிமோதல் தலை தூக்கியது. மகாராஷ்டிராவில் எங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி வேண்டும் என சிவசேனா கேட்க, அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துவந்தது பா.ஜ.க. இந்தச் சண்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி கூட்டணி முறிவு வரை சென்றுவிட்டது.

மகாராஷ்டிராவில் இந்த முறை எங்கள் ஆட்சிதான் என்ற முடிவில், பா.ஜ.க-வைப் புறம் தள்ளிவிட்டு என்.சி.பி, காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முன்வந்தது சிவசேனா. சிவசேனாவும் பா.ஜ.க-வும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருப்பவர்கள், இதனால் எந்த நேரமும் சிவசேனா, பா.ஜ.க-வுடன் இணைந்துகொள்ளலாம் என நினைத்த காங்கிரஸ், சிவசேனாவுடன் கூட்டணி வைக்க தயக்கம் காட்டியது. ஆனால், விடாப் பிடியாக ஒற்றைக் காலில் நின்ற சிவசேனா, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தங்கள் வழிக்குக் கொண்டுவந்தது. இந்த இரு கட்சிகளுக்கும் பாலமாக என்.சி.பி செயல்பட்டு வந்தது. இந்த மூன்று கட்சிகளும் அரசு அமைப்பது தொடர்பாகக் கடந்த ஒரு வாரமாகத் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.

இதற்கு நடுவே, பா.ஜ.க-வுக்கு பயந்து சிவசேனா தங்கள் எம்.எல்.ஏ-க்களை ஹோட்டலில் தங்கவைத்தது, சரத்பவார் பிரதமரைச் சந்தித்தது, சிவசேனாவின் சஞ்சய் ராவத், சரத் பவாரின் கருத்தை விமர்சித்தது, சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, என பல்வேறு தொடர் சம்பவங்கள் அரங்கேறி மகாராஷ்டிராவை எப்போதும் பரபரப்பாக இருக்க வைத்தன.

இந்த நிலையில், நேற்று மாலை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் இறுதியாக மும்பையில் சந்தித்துப் பேசினர். இதன் முடியில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார் என சரத் பவார் தன் வாயாலேயே அறிவித்தார். உத்தவ் தாக்கரேவும் , கூட்டணி கட்சிகளுடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இன்று இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆளுநரைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, இன்று டெல்லி செல்லவிருந்த மகாராஷ்டிரா ஆளுநர் தன் பயணத்தை திடீரென ரத்து செய்தார். இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில், இன்று மகாராஷ்டிரா அரசியல் ஒரு முடிவுக்கு வந்துவிடும், உத்தவ் தாக்கரே முதல்வராகப் போகிறார் என நினைத்து மொத்த அரசியல் வட்டாரங்கள் நேற்று இரவு உறங்கியிருப்பார்கள். ஏன் இன்று அதிகாலை வெளியான பத்திரிகைகளிலும் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என்ற செய்தி பதிவாகியிருந்தது.

ஆனால், மொத்த இந்தியாவுக்கும் ஆச்சர்யம் தரும் விதமாக, மிகவும் அமைதியாக யாருக்கும் தெரியாமல் காய் நகர்த்திய பா.ஜ.க, ஒரே இரவில் என்.சி.பி-யுடன் கூட்டணி வைத்து இன்று காலை தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவியும் ஏற்றுக்கொண்டார். துணை முதல்வராக சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் சிவசேனா, காங்கிரஸ் உட்பட மொத்த இந்தியாவையும் மகாராஷ்டிரா பக்கம் திரும்ப வைத்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அக்கட்சியின் அஜித் பவாரை இழுத்து துணை முதல்வர் பதவியும் அளித்து விட்டது பாஜக. இந்த நிலையில், “அஜித் பவார் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பம். அதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என பகிரங்கமாக அறிவித்துள்ளார் என்.சி.பி தலைவர் சரத்பவார். திடீர் அரசியல் மாற்றதால் மகாராஷ்டிராவே தலைகீழாக மாறியுள்ளது.

என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் வருகை தந்த என்சிபி எம்எல்ஏக்களின் வருகை பதிவேட்டுக்கு வாங்கப்பட்ட கையெழுத்தை அஜித் பவார் தவறாக பயன்படுத்திவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நிச்சயம் தோற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இன்று பிற்பகல் செய்தியாளர்கள் முன்னிலையில் என்சிபி எம்எல்ஏ-க்களின் அணிவகுப்பை நடத்த உள்ளதாக அக்கட்சி தலைவர் சரத் பவார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...