ஹைதராபாத்தில் காணாமல்போன கால்நடை மருத்துவர், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி, கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். ஷாம்ஷாபாத் பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து திரும்பி வரும் வழியில், இவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. லாரி ஓட்டுநர் ஒருவர், பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு போன்மூலம் தெரிவித்தார்.
இரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்டவர், “ பைக் பஞ்சர் ஆச்சு… எனக்கு பதற்றமா இருக்கு டோல்கேட் பக்கத்துலதான் இருக்கேன். நீ கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே இரு” எனக் கூறியுள்ளார். பஞ்சரான பைக்குடன் அங்கு தவித்துள்ளார். சிறிது நேரத்தில், அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. அதன்பின்னர், அந்த போன் ஆன் செய்யப்படவேயில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அவர் கூறிய டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அப்போது அவர் அங்கில்லை. இதனால் பதற்றமடைந்தவர்கள், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரித்துவந்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைத்துள்ள ஷாத்நகர் பகுதியில் பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதிகாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஒருவர், இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டார். உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் காணாமல்போன பெண்களின் விவரத்தை சேகரித்தனர். அதன்படி, பிரியங்கா குடும்பத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பிரியங்காவின் சகோதரி, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தன் சகோதரிதான் என உறுதிசெய்தார். அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து ஷாத்நகர் காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் , “ டாக்டர். பிரியங்கா ரெட்டி தன் சொந்த வேலை காரணமாக புதன்கிழமை கச்சிபவ்லி (Gachibowli) வரை சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பியவர், 9 மணியளவில் தன் சகோதரிக்கு போன் செய்து, இருசக்கர வாகனம் பழுதடைந்துவிட்டதாகவும் வழிப்போக்கர்கள் இருவர் உதவி செய்வதாகவும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் போன் செய்துள்ளார். இங்கிருக்கும் சிலர், தன்னை ஒருமாதிரி பார்ப்பதாகவும் தனக்கு பதற்றமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அதன்பின்னர், அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. பதற்றமடைந்த குடும்பத்தினர், ஷாம்ஷாபாத் புறநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
காணாமல்போன டாக்டரின் புகைப்படத்தை மற்ற காவல் நிலையத்துக்கு அனுப்பினர். அப்போதுதான், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதையடுத்து, ஷாம்ஷாபாத் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்தனர். பிரியங்காவின் தங்கை வந்து, இறந்தது தன் சகோதரிதான் எனக் கூறினார்.
அவருடைய ஸ்கார்ப் மற்றும் விநாயகர் படம் பதித்த தங்கச் சங்கிலியை வைத்து, இறந்தது பிரியங்கா என உறுதிசெய்தார்” என்றார். ‘பிரியங்காவை அடையாளம் தெரியாத சில நபர்கள் காரில் இந்தப் பகுதிக்கு அழைத்துவந்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழுமையாகத் தகவல்கள் தெரியவரும்’ என போலீஸார் கூறுகின்றனர்.