மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரியும் மாணவர் அமைப்பினர் இன்று காலை அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்பு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், சட்டத்தை ஆதரித்த மாநில அதிமுக அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் NRCக்கு எதிராகவும், தமிழறிஞர் நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த அதிரை காவல்துறையினர், மாணவர்களிடம் ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தை கைவிடாவிட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
உடனே மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் என்று சொன்ன ஹெச். ராஜா மீது நடவடிக்கை இல்லையா ? என மாணவர்கள் கேள்விகள் எழுப்பினர். இன்று காலை தொடங்கிய கண்டன ஆர்ப்பாட்டம், தற்போதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.