மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் ரஜாக் தலைமை தாங்கினார். அதிரை அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் முன்னிலை வகித்தனர். ஹசனார் தொகுத்து வழங்கினார். கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி தலைமை இமாம் மௌலானா. M.G. சஃபியுல்லா அன்வாரி துவக்கவுரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான பழ. கருப்பையா, தமுமுக மாநில துணைத்தலைவர் சகோ. கோவை செய்யது, திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கேற்று கண்டன பேருரை நிகழ்த்தினர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் செய்திருந்தனர். இறுதியாக பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேல் நன்றி கூறினார்.