Home » வாகன ஓட்டிகளுக்கு பேரிடி… பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு !

வாகன ஓட்டிகளுக்கு பேரிடி… பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு !

0 comment

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்துவதால் அதன் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எரிப்பொருளின் தேவை குறைந்ததால் கடந்த 4 அல்லது 5 நாட்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வருகிறது.

பிரென்ட் வகை கச்சா எண்ணெய் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரமும் நிலைப்புத்தன்மை இல்லாத நிலை உள்ளது. உலகில் 70 சதவீதம் கச்சா எண்ணெய் தேவையை இதுதான் பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. கடந்த 3 தினங்களாக இதன் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் விலை ரூ 3 உயரும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்றைய நிலையில் பீப்பாய் ஒன்று 34.72 டாலராக சரிவை சந்தித்து வந்த நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா 80 சதவீதம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வரும் நிலையில் இந்த விலை குறைவால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலையில் இடியை இறக்கியது மத்திய அரசு.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் ஏற்கெனவே பால் விலை உயர்ந்துவிட்டது, காய்கறிகளும் உயர்ந்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் என கவலை தெரிவிக்கின்றனர். மேலும் குறைக்கும் போது பைசா கணக்கிலும் ஏற்றும் போது ரூபாய் கணக்கிலும் ஏற்றுவதால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter