தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தாக்குதலைத் தவிர்க்க பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு என்பது மஸ்கட்டில் இருந்து வந்தவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
2-வது நபரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் இருந்து வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் கொரோனா பாதித்த இளைஞர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் ? அவரது உறவினர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்புக்குள்ளாக்கப்படுவர் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.