திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக அளித்த புகார் பொய் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து.
இவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், பகவான் நந்து தனது ஓட்டுநர் உதவியோடு அரசியல் ஆதாயத்திற்காக தன்னை தானே வெட்டிக்கொண்டதை கண்டுபிடித்தனர்.
கட்சியில் பொறுப்பை பெறுவதற்காக அவர் இப்படி தன்னைத் தானே தாக்கிக்கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்து. இதையடுத்து பொய் வழக்கு கொடுத்த பகாவன் நந்து மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, பகவான் நந்து காவல்துறையிடம் அளித்திருந்த புகாரில் தான் செல்போன் கடை வைத்துள்ளதாகவும், இரவு வீட்டிற்கு போகும்போது தன்னை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.


