தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது தமிழகத்தில் 6 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக ஓமன் நாட்டில் இருந்து வந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியருக்கு, வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அடுத்தடுத்து மொத்தம் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மூன்று மேலும் மூன்று பேருக்கு கொரோனா, வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி, விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர். மூன்று பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆகும்.
வெவ்வேறு நாடுகளில் இருந்து பயணம் செய்து இந்தியா வந்தவர்களுக்குத்தான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்குள் சமுதாய பரவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த நோய் தாக்கம் கண்டறியப்படவில்லை. புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து எங்கெல்லாம் வருகிறார்களோ, அங்கெல்லாம் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள் பிற மாநில எல்லைகள் உள்ளிட்ட அனைத்திலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.