சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய சில பயணிகள் அரசின் உத்தரவை மீறுவது சமூகத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
சில வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால் இப்படி சுயமாக கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது,
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 2,05,396 பேர் ஆய்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 9424 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 400 பேர் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் குணமாகி உள்ளார். 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.