நாட்டினுடைய மதசார்பின்மையை காக்கும் நோக்கோடு தேசம் முழுவதும் செயல்பட்டுவரக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்களை கடந்த 21.03.2020 அன்று பாஜக-வை சேர்ந்த நிர்வாகியான கல்யாணராமன் என்பவர் தன்னுடைய (@KalyanBJP) சமூக ஊடக டிவிட்டர் கணக்கிலிருந்து “பழனிபாபாவின் நிலைமை தெக்லாண் பாகவி வந்துவிடக்கூடாது என்பது தான் நான் வணங்கும் மாகாளி பராசக்தி நோக்கி நான் வைக்கும் பிரார்த்தனை” என்பதாக எங்கள் கட்சியின் தேசிய துணைத் தலைவர் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய விதமாக அவர் எழுதி இருக்கிறார்.
பழனிபாபா அவர்கள் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைவர். அவர் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டு இறந்தார் என்பது நாடறிந்த விஷயமாகும். எனவே பழனிபாபா போன்று எங்கள் கட்சியைச் சேர்ந்த தேசிய துணைத் தலைவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆகவே பழனிபாபா போன்று கொலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கத்தில் வன்முறையை தூண்டியும், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவரின் பெயருக்கு களங்கம் விளைவித்தும், தமிழகத்தில் மத பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தொடர்ந்து சமூக பதட்டத்தை ஏற்படுத்தி, டிவிட்டரில் பதிவு வெளியிட்டுவரும் கல்யாணராமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சென்னை காவல் ஆணையர் அவர்களை எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா தலைமையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், வழக்கறிஞர் ராஜா முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா ஆகியோர் சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினர். இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் அவர்கள் உறுதியளித்தார்.