இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இன்னும் அதிகம் செய்லபட வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார்.
“நாம் போதுமான அளவிற்குகூட இன்னும் எதையும் செய்யவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையை இந்திய அரசு அறிவித்தது.
ஏழைகளுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும் அவர்களின் உணவு பாதுகாப்புக்கும் இதில் பெரு்மபாலான தொகை ஒதுக்கப்பட்டது.
கோவிட் 19 நோய் பரவலை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் இந்தியா ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாலும், அது முடிவில்லை என்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நோய் நம்மிடையே நீண்ட காலம் இருக்கும் என்று தெரிவித்த அபிஜித் பேனர்ஜி, தடுப்பூசி இப்போதைக்கு தயாராகும் நிலையில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்திய – அமெரிக்க பொருளாதார நிபுணரான அபிஜித் பேனர்ஜி, 2019ஆம் ஆண்டு தனது மனைவியும் சக ஆய்வாளருமான எஸ்தர் டஃபலோ உடன் நோபல் பரிசு பெற்றார்.