வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் 108 ஆவது பிறந்த நாள்விழாவில் அவர் கலந்து கள்ளவில்லை. இதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த வதந்திகளும் உலா வரத்தொடங்கின.
இந்த பிறந்த நாள் விழா அந்நாட்டு நாள்காட்டியில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியிலேயே கிம் கலந்து கொள்ளாததால் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.
எனினும் வடகொரிய ஊடகங்களோ எந்த வித தகவலையும் சொல்லாமல் இருந்தன. இதுகுறித்து பல்வேறு ஊகங்கள் துளிர்விட்டு வந்த நிலையில் கிம்மிற்கு சொந்தமான ரயில் வான்சான் நகரில் ஏப்ரல் 21 ஆம் தேதி இருப்பது போன்ற ஒரு செயற்கைகோள் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் கிம் அந்த நகரத்தில் இருக்கலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் கிம்மின் உடல் நிலை குறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜோ இன்னின் வெளிநாட்டுக் கொள்கைக்கான ஆலோசகர் சங்க் இன் மூன் கூறுகையில், கிம்மின் உடல்நிலை குறித்து எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறார். அவர் நன்றாக இருக்கிறார். அந் நாட்டில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.
கிம்மின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அது குறித்து கண்காணித்து வருவதாகவும் அமெரிக்காவின் உளவுத் துறை கூறியது. அது போல் மற்றொரு உளவுத் துறை அதிகாரி கூறுகையில் கிம்மின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வது அத்தனை சுலபமில்லை. அந்த நாட்டில் அதிபர் தொடர்பான ரகசியங்களை ஒருவரும் கசியவிடமாட்டார்கள் என தெரிவித்தார். பின்னர் அண்மைக்காலமாக வடகொரியாவில் அசாதாரண சூழல் நிலவுவது போன்ற எந்த வித நடவடிக்கையும் தெரியவில்லை என அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.