கொரோனா உள்ளிட்ட தொற்று நோயால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வதை எதிர்த்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசினால், அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் ( Notified Disease) உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும் தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த அவசரச் சட்டத்தின்படி அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் ( Notified Disease) உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுப்பதும் தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 பிரிவு -74ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.