கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது வாடி ரெயில்வே நிலையம். நேற்று மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரெயில் இந்த ரெயில் நிலையத்தை அடைந்தது. அந்த ரெயில் நிலையத்தில் டீசல் எஞ்சினில் இருந்து எலக்ட்ரிக் எஞ்சின் மாற்றும் பணி நடந்தது.
வாடி ரெயில் நிலையத்தில் இருந்து சோலாபூர் வரை அந்த எஞ்சின் சென்றது. அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து மீண்டும் வாடி ரெயில் நிலையத்தை அடைந்தது. எஞ்சினில் இருந்து டிரைவர் இறங்கி சென்ற சிறிது நேரத்தில் எஞ்சின் ஓடத் தொடங்கியது.
ஆளில்லாமல் ரெயில் எஞ்சின் ஓடுவதை கண்ட டிரைவர், இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் அருகிலுள்ள மற்ற ரெயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து, எதிரே வரும் மற்ற ரெயில்களை ஆங்காங்கே நிறுத்தி வைக்கும்படி சிக்னல் கொடுத்தனர்.
ரெயில் எஞ்சின் நிற்காமல் ஓடியது. எஞ்சினை நிற்க வைப்பதற்காக ரெயில்வே ஊழியர் ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்து வந்தார். சுமார் 13 கி.மீ. தூரம் ரெயில் எஞ்சின் நிற்காமல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில், நல்வார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது ரெயில்வே ஊழியர் போராடி எஞ்சினில் ஏறி நிறுத்தினார். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆனாலும், ஆளில்லாமல் எஞ்சின் ஓடியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சினிமாவை மிஞ்சும் விதமாக, ஆளில்லாமல் ஓடிய ரெயில் எஞ்சினை பைக்கில் விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய ஊழியருக்கு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்