தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் இன்று (30/04/2020) காலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. லேசாக தொடங்கிய மழை கன மழையாக மாறி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ளது.
இந்நிலையில் இடியுடன் கூடிய மழையால் மதுக்கூரில் இடி தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மதுக்கூர் செய்டித் தெருவைச் சேர்ந்த பன்னீர், பத்தர் தொழில் செய்து வந்தார். அவர் இன்று காலை குளிக்க கரூப்பூர் என்னும் ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததில் பன்னீர் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து உடல் மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இடி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது மதுக்கூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.