தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம் IAS எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சண்முகம் IAS வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொருள் வாங்கும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் முக கவசம் அணிதல் வேண்டும். முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு கடையின் உரிமையாளர்கள் பொருட்களை வழங்கக்கூடாது. முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள், மருந்துக்கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் நிரப்பும் இடங்கள் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்ச்சியாக நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மூன்று வண்ண அடையாள அட்டை திட்டம் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற வெளியில் வர வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 நாட்களில் மட்டுமே வெளியில் வர வேண்டும்.
144 ஊரடங்கு தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளதால், மீறுவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளவரை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என மண்டல கொரோனா வைரஸ் தடுப்பு குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம் IAS தெரிவித்துள்ளார்.