தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் போது கர்நாடகாவில் கொரோனா தொற்று மிக குறைந்த அளவே பரவி உள்ளது. இதுவரை சுமார் 860 பேருக்குதான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் பாதிக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ளோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வருவருக்கு கடும் கட்டுப்பாடுகளை கர்நாடகா அரசு விதித்துள்ளது.
இதன்படி நாட்டின் எந்த மாநிலத்தில் இருந்தும் கர்நாடகாவிற்கு திரும்பி வரும் பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் சொந்த செலவில் பள்ளிகள் அல்லது விடுதிகள் அல்லது ஓட்டலில்களில் தனி அறையில் தங்கியிருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்பவர்களை மட்டுமே அம்மாநில போலீசார் கர்நாடகா எல்லைக்குள் அனுமதிக்கிறார்கள். மற்றவர்களை நேற்று முதல் அனுமதிக்கவில்லை.
வெளிமாநிலங்களில் இருந்து வந்து பெங்களூரில் உள்ள ஓட்டலில் தனி அறையில் 14 நாட்கள் இருக்க விரும்புவோருக்கு ஓட்டல் கட்டணத்தை மாநகராட்சி அதிகாரிகள் நிர்ணயம் செய்வார்கள் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.