மத்திய அரசு அமல்படுத்தி வந்த லாக்டவுன் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாக கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை தீவிரமாக அழித்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் ராகுல் காந்தி. இதுதொடர்பாக தொடர்ந்து டிவிட்டரிலும், வீடியோ கான்பரன்சிங் பேட்டிகள் மூலமாகவும் அவர் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று இரண்டு டிவீட்கள் போட்டு மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் ராகுல் காந்தி. அதில் ஒன்றில் மத்திய அரசு அமல்படுத்திய லாக்டவுன் தோல்வியை கிராப் மூலமாக விளக்கியுள்ளார்.
2வது டிவீட்டில் இந்தியாவின் பொருளாதாரத்தை மிகத் தீவிரமாக மத்திய அரசு அழித்து வருவதாக அவர் சாடியுள்ளார்.
ராகுல் காந்தி போட்ட ஒரு டிவீட்டில் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட விதத்தையும், அன்லாக்டவுனை அவர்கள் கொண்டு வந்த விதத்தையும், இந்தியாவில் அது எப்படி செய்யப்பட்டது என்பதையும் கிராஃப்கள் மூலம் விளக்கியுள்ளார் ராகுல் காந்தி. இதுதான் தோல்வி அடைந்த லாக்வுடன் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அந்த டிவீட்டில், இந்தியா பீக் அதிகமாகும்போது லாக்டவுனை விலக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த மார்ச் இறுதியில் இந்தியாவில் முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவில் பாதிப்பு மிக மிக குறைவாகவே இருந்தது. ஆனால் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் சமயத்தில் இந்த பாதிப்பானது பல மடங்கு உயர்ந்து விட்டது. தற்போது இந்தியாவில் படு வேகமாக கொரோனா பரவி வருகிறது. ஆனால் லாக்டவுனில் பல தளர்வுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவித்துள்ளன. அன்லாக்டவுனையும் அறிவித்து விட்டனர்.
இதைத்தான் சுட்டிக் காட்டி 5 கிராப்களை வெளியிட்டு இந்தியாவின் லாக்டவுன் திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. இதுபோல அவர் போட்டுள்ள இன்னொரு டிவீட்டில், ஒரு செய்தி இணைப்பை மேற்கோள் காட்டி, இந்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மிகத் தீவிரமாக அழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு குடும்பத்துக்கு ரூ. 10,000 வழங்க தாங்கள் கோரிக்கை விடுத்து வந்தபோதும் அதை தர மத்திய அரசு மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிவாரணத்தையும் மத்திய அரசு செய்யத் தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி அரசை சாத்தான் வெர்ஷன் 2.0 என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.