உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா – காஸியாபாத் எல்லையில் இருக்கும் கோடா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜேந்திரசிங், நீலம் தம்பதி. 30 வயதாகும் நீலம், 8 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார், லாக்டௌனுக்கு முன்னதாக தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்கான சோதனை, ஆலோசனை ஆகியவற்றைக் கேட்டு வந்துள்ளார். லாக்டௌனின் போதும் தொலைப்பேசி மூலம் தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நீலமுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றதும் கர்ப்பிணிக்குத் தேவையான படுக்கைகள் இல்லை எனக் கூறி அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். பிறகு அங்கிருந்து வலியுடன் சுமார் 8 மருத்துவமனைக்கு ஏறி இறங்கியுள்ளனர். ஆனால் அனைவரும் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததால் 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு நீலம், ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மொத்த உத்தரப்பிரதேசத்தையும் உலுக்கியுள்ளது.
“என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதும் உடனடியாக அருகில் இருக்கும் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அனுமதி மறுத்ததும் ஷார்தா மருத்துவமனைக்குச் சென்றோம். பின்னர் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் ஜிஐஎம் எஸ் மருத்துவமனைக்குச் சென்றோம். இது மட்டுமல்லாது மேலும் பல தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். எங்குமே என் மனைவியை அனுமதிக்கவில்லை. இறுதியாக மீண்டும் ஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை வென்டிலேட்டரில் வைக்கும்போது, என் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். அவள் ஆம்புலன்ஸில் இருக்கும்போதே இறந்திருக்கிறாள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கௌதம புத்தாநகர் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் கூறியுள்ளார். அதே கௌதம புத்தாநகரில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்த இரண்டாவது நபர் நீலம். இதற்கு முன்னதாக கடந்த மே 25-ம் தேதி பிறந்து சில நாள்களே ஆன குழந்தைக்கு சிகிச்சையளிக்க எந்த மருத்துவமனையும் முன்வராததால், அந்தக் குழந்தையும் மருத்துவமனை தேடலிலேயே உயிரிழந்துள்ளது. இதே போன்ற தொடர் சம்பவங்கள் அப்பகுதி மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளன. உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் நீலமுக்கு ஆதரவாகவும் அவருக்கு அனுமதி மறுத்த மருத்துவமனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.