கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும், தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இணையவழி போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இணையவழி போராட்டம் நடைபெற்றது. மதுக்கூர், பட்டுக்கோட்டை, செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் அப்பகுதி பொறுப்பாளர்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.























