தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி ஊராட்சியில் சேதமடைந்த மண்சாலையை சீரமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி ஊராட்சியில் செங்கமங்கலம் செல்லும் வழியில் பிரிவு மண்சாலை உள்ளது. பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு செல்லும் பாதையில், சுமார் 10 அடிக்கு சேதமடைந்த நிலையில் போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. விவசாயிகள் வயல்களுக்கு இடு பொருள்கள் கொண்டு செல்வதும், விளைவித்த பொருள்களை கொண்டு வருவதும் இந்த பாதையின் வழி யாகத்தான். தற்போது கோடை விவசாயம் செய்து உள்ளனர். அறுவடை காலமாக உள்ளதால், அறுவடை இயந்திரங்க ளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பலவாறு சிரமப்படுகின்றனர்.
எனவே உடனடியாக இந்த மண்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்த சன்னாசி கூறுகையில், “மாவடுகுறிச்சியில் இருந்து செங்கமங்கலம் செல்லும் சாலையில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பழையநகரம் மண்சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்த பாதையின் வழியாக விவசாயிகள் சென்று வந்து கொண்டிருந்தனர். தற்போது மண் சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்பதால் நெல் வயல்களில் அறுவடை செய்து கொண்டு வரமுடியாமல் மிகுந்த சிரமமடைகின்றனர். இதுகுறித்து,மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய ஆணையர், ஒன்றிய குழு உறுப்பினருக்கு மனு கொடுத்து உள்ளோம். உடனடியாக நடவடிக்கையும் எடுத்து மண்பாதையை சீரமைத்து தர வேண்டும்” என்றார்.