ஏன் நின்று கொண்டு சாப்பிடக் கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா..??
தற்போது பல ஹோட்டல்களில் நின்று கொண்டே தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. அது மட்டுமின்றி, இன்றைய அவசர உலகில் நம்மால் பொறுமையாக உட்கார்ந்து எதையும் சாப்பிடும் நிலைமையில் இல்லை. எதற்கு எடுத்தாலும் அவசரம், எதிலும் அவசரம் தான். வாழ்வதற்காக நாம் உழைக்கலாம். ஆனால் வெறுமனே உழைத்து என்ன பயன். உழைப்பதற்கும், வாழ்வதற்கும் உயிர் வேண்டுமல்லவா? உயிர் வாழ வேண்டுமானால், உண்ணும் உணவுகளால் நல்ல பலன் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அமர்ந்து நிதானமாக நன்கு மென்று உணவை விழுங்க வேண்டும்.
உணவை உண்ணும் போது நின்று கொண்டே சாப்பிடுவது என்பது ஒரு கெட்ட பழக்கம். இப்பழக்கம் உங்களிடம் இருப்பின் அதை உடனே மாற்றுங்கள். எப்படி தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாதோ, அதேப் போல் தான் உணவு உண்ணும் போதும் நின்று கொண்டு உண்ணக் கூடாது. அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா? இக்கட்டுரையில் ஒருவர் உணவை நின்று கொண்டு சாப்பிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உடனே அப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடும்..
நின்று கொண்டே ஒருவர் உணவை உண்ணும் போது, வயிறு நிறைந்து விட்டதா அல்லது இல்லையா என வயிற்றிற்கே குழப்பம் ஏற்பட்டு விடும். நின்று கொண்டு உணவை உண்ணும் போது எவ்வளவு உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வையே பெறமாட்டீர்கள், வேண்டுமானால் நின்று கொண்டு சாப்பிடும் போது கவனித்துப் பாருங்கள். இதனால் ஒருவர் அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடும். ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு வழி வகுப்பதோடு, பல ஆரோக்கிய சிக்கல்களையும் உண்டாக்கும். எனவே நின்று சாப்பிடும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.
வயிற்று உப்புசம்..
ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணும் போது, செரிமான மண்டலத்தில் உணவுகள் அதிகமாகி உணவுகளை ஜீரணிக்க முடியாமல் செரிமான செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, வயிற்று உப்புசத்தை சந்திக்க நேரிடும். அதேப் போல் வேகமாக உணவை உண்ணும் போது, உணவுகளை உடைதெறியும் செயல்பாடு வேகமாக்கப்பட்டு, உணவுகளில் உள்ள சத்துக்களை குடலால் உறிஞ்ச முடியாமல் போய், வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை ஏற்படும். பொதுவாக வயிற்றில் உள்ள செரிமானமாகாத கார்போ ஹைட்ரேட்டுகள் புளிக்கப்பட்டு தான், வயிற்று உப்புசத்தை உண்டாக்குகின்றன.
மோசமான செரிமானம்..
உணவை சாப்பிடும் போது, அந்த உணவு சரியாக செரிமானமாவதற்கு நீங்கள் சாப்பிடும் நிலைகள் மிகவும் முக்கியம். நீங்கள் நின்று கொண்டு என்ன சாப்பிட்டாலும், அது செரிமானமாகாமல் நேரடியாக குடலை அடைந்து விடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் குடலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு, செரிமான பிரச்சனையை உண்டாக்குகின்றன. சிலர் இதன் விளைவாக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள்.
மென்று விழுங்குவது அவசியம்..
எந்த ஒரு உணவை உண்பதாக இருந்தாலும், அந்த உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும். ஒருவர் நின்று கொண்டு, உணவுகளை சரியாக மெல்லாமல் விழுங்கினால், அதன் விளைவாக அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். உணவுகள் செரிமானமாவதற்கு அந்த உணவுகளை மென்று விழுங்குவது என்பது மிகவும் முக்கியமாகும். எனவே என்ன அவசரமாக இருந்தாலும், உணவுகளை நன்கு மென்று விழுங்குங்கள்.
பசி அதிகரிக்கும்..
பார்ட்டிக்கு சென்று நன்கு வயிறு நிறைய உணவை உண்டு வீட்டிற்கு வந்த பின், மீண்டும் கடுமையான பசியை உணரக்கூடும். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? அது வேறொன்றும் இல்லை, நீங்கள் நின்று கொண்டு சாப்பிட்டது தான். பொதுவாக உணவை நின்று கொண்டு சாப்பிடும் போது, அந்த உணவானது 30 சதவீதம் தான் செரிமானமாகி, உடலில் சேர்கிறது. இதனால் தான் நீங்கள் நின்று கொண்டு உணவு உண்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் பசி உணர்வு ஏற்படுகிறது. இதுவரை நின்று கொண்டே உணவை உண்பதால் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி பார்த்தோம். இப்போது ஒருவர் நன்கு உட்கார்ந்து பொறுமையாக உணவை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.
நன்மை 1 தரையில் உட்கார்ந்து உணவை உண்பதால், நாம் சாப்பிட மட்டும் செய்வதில்லை, சுகாசனம் என்னும் ஒரு வகையான ஆசனத்தையும் தான் செய்கிறோம். சொல்லப் போனால் இந்த நிலையால் மனம் அமைதி அடைவதோடு, கீழ் முதுகுத் தண்டில் சிறு அழுத்தம் கொடுக்கப்பட்டு, உடல் ரிலாக்ஸாகும்.
நன்மை 2 சாப்பிட தரையில் அமரும் போது, முன்னோக்கி குனிந்து உணவை வாயில் வைத்து, மீண்டும் பழைய நிலைக்கு வருவோம். இப்படி முன்னும் பின்னும் வருவதால், அடி வயிற்றில் உள்ள தசைகள் செரிமான அமிலங்களின் உற்பத்தியை ஊக்குவித்து, உண்ணும் உணவுகள் சரியாகவும், வேகமாகவும் செரிமானமாக உதவும்.
நன்மை 3 சாப்பிடுவதற்கு தரையில் அமர்ந்து கால்களை குறுக்கே போட்டு அமரும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, லேசான அழுத்தத்தையும் கொடுக்கும். உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், செரிமானமும் சிறப்பாக இருக்கும். ஆகவே இதை நினைவில் கொண்டு இனிமேல் தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள்.
நன்மை 4 மருத்துவர்கள் தினமும் சிறு உடற் பயிற்சியையாவது செய்ய வேண்டுமென அறிவுறுத்துவார்கள். சாப்பிடும் நேரம் வந்து விட்டால், தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். ஏனெனில் இதுவும் ஒரு வகையான உடற்பயிற்சி தான். அதுவும் இது உட்கார்ந்து எழும் பயிற்சியாகும்.
பஃபெட் உணவு முறை..
முந்தைய காலத்தில் மக்கள் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதுவும் பண்டிகைக் காலங்களில், விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களை அமர வைத்து முதலில் உணவைப் பரிமாறுவதே நமது பழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது உண்ணும் உணவுகளில் மட்டுமின்றி, உணவுப் பழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. தற்போது பஃபெட் உணவு முறை மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த முறையால் உணவை நின்று கொண்டு, நண்பர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிடுவோம். இப்படி சாப்பிடுவது நன்றாகத் தான் இருக்கும். ஆனால் ஆரோக்கியம் என்று பார்க்கும் போது, இது முற்றிலும் ஆரோக்கியத்தை அழிக்கக்கூடிய மோசமான பழக்கம். ஆகவே இந்த கெட்ட பழக்கத்தைக் கைவிட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை இனிமேல் மேற் கொள்வோம்.