தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட கர்நாடகாவில் உள்ள பெல்காம், பீஜப்பூர், பாகல்கோட், தார்வாட், கதக் போன்ற மாவட்டங்களிலும், மங்களூர், உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா போன்ற கடலோர மாவட்டங்களிலும், ஹாசன், குடகு, சிக்மங்களூர், ஷிமோகா போன்ற மலைநாடு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது.
இம்மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளக் காடுகளாகக் காட்சியளிப்பதோடு மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவாகி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை 113 அடி உயரத்தைத் தாண்டி வருகிறது. இதன் முழு கொள்ளளவான 124.8 அடியை ஒரு வாரத்துக்குள் நிரம்பிவிடும். கபினி அணையின் முழு கொள்ளளவான 84 அடி நிரம்பிவிட்டது. அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 73,000 கன அடி உபரி நீரும், கபினி அணையிலிருந்து 70,000 கன அடி உபரி நீரும், கபினியின் துணை அணையிலிருந்து 10,000 கன அடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.