தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமே மிதந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் நகரில் வெள்ளத்தில் சீக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. கார்களும் மனிதர்களும் நடமாடிய தெருக்கள் மலைகளில் பெருக்கெடுத்தோடும் காட்டாறுகளைப் போன்ற பெருவெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. ஹைதராத் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்து கிடக்கின்றன.
ஒரே நாளில் 26 செ.மீ அளவுக்கு மழை கொட்டியதால் ஒட்டுமொத்த நகரமே வெள்ளதேசமாகக் காட்சியளிக்கிறது. இதனையடுத்து மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் இறங்கினர்.
பந்தல்குடா என்ற பகுதியில் வெள்ளத்தால் சிக்கியவர்களுக்கு ராணுவ வீரர்கள் உணவுப் பொருட்களை விநியோகித்தனர். வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ராணுவ மருத்துவ குழுக்களும் களமிறங்கி உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹைதராபாத் எம்பி அசாதுத்தீன் ஓவைசி, தெலுங்கானா துணை முதல்வர் கே.டி. ராமாராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.