தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 8/11/2020 ஞாயிற்றுக்கிழமை வி.பி.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வல்லம் ஜாபர் அலி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் தாவூத்கைஸர், மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை அப்துர் ரஹீம் ஆகியோரும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், அனைத்துக் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் போதை பழக்கம், சினிமா மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளிலும் சிக்கித்தவிக்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 10 ம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலக்கை நோக்கி இளைஞனே வா.! என்ற செயல்திட்டத்தை தீவிரப் பிரச்சாரமாக செய்ய இருக்கின்றோம். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும் படி இச்செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான நபிகள் நாயகம் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்தும், அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் விதமாகவும் சில விஷமிகள் செயல்பட்டுகின்றனர். அவர்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்பதை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கின்றது.
சமீபத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறான முறையில் பேசிய பிரான்ஸ் நாட்டு அதிபரை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு உள்ளது. இது போதுமானது அல்ல. இதை 7 சதவீதமாக அதிகரித்து தர வேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் பல போராட்டங்களை நடத்தியும் வந்தோம். அதை உயர்த்தி தருவோம் என காலம் சென்ற ஜெயலலிதா அவர்கள் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். அம்மாவின் வழியில் பயணிப்பதாக மேடைக்குமேடை முழங்கி வரும் அதிமுக அரசு உடனடியாக இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரும் படி இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் இந்நாட்டு மன்னர்களை அந்நியர்களாக சித்தரிக்கும் கொடுஞ்சட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. அதன் பின் இந்தியாவே புரட்சிக்களமாக மாறியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் வீரியமிக்க போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியது. தற்போது கொரோனா முடிந்தவுடன் அது நடைமுறைப்படுத்தப் படும் என பாஜக பேசி வருகிறது. அதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
அது நடைமுறைப்படுத்தப்பட்டால் வீரியமிக்க போரட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையேற்று நடத்தும் என இச்செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.