2020ம் ஆண்டு பொன்னான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு புண் ஆன ஆண்டாக அமைந்துவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வலிகளை இந்த ஆண்டு கொடுத்திருக்கிறது.
கொரோனா, ஊரடங்கு, இவை இரண்டுமே வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத துயரத்தை மக்களுக்கு வழங்கிவிட்டன. அத்துடன் நிவர் புயலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது.
இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் புரேவி புயல் தென்மாவட்டங்களை நெருங்க போகிறது. மாலை அல்லது நள்ளிரவு பாம்பன் மற்றும கன்னியாகுமரி இடையே கரையை கடக்க போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் தான் வங்க கடலில் நிவர் புயல் உருவாகி புதுச்சேரி- மரக்காணம் இடையே கரையை கடந்தது. நிவர் புயலால் கடலூர் மாவட்டமும், சென்னை புறநகர் பகுதியும் பலத்த சேதத்தை சந்தித்தன.
இந்நிலையில் புரேவி புயல் தென்மாவட்டங்களில் கடந்தாலும் கடலோர மாவட்டமான சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் என்ன மாதிரியான பாதிப்பை தரப்போகிறது என்பது தெரியவில்லை. அதற்கு புதிய காற்றழுத்தம் உருவாக விருப்பது மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடற்பரப்பில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மலாய் தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தம் உருவானால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்பதுடன் புயலாக மாறினால் பலத்த சேதத்தையும் விளைவிக்கும்.