இலங்கையை ஒட்டிய கடற்கரை பகுதி மற்றும் குமரிக்கடல் அருகே நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் கடந்த இரு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி கடந்த 24 மணிநேரத்தில் அதிராம்பட்டினத்தில் 30.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மதுக்கூரில் 32.4 மிமீ, பட்டுக்கோட்டையில் 51 மிமீ, ஈச்சன்விடுதியில் 80.2, பேராவூரணியில் 78.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.